ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகள் இணைந்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பவுள்ள கடிதம் இன்று கையளிக்கப்படவுள்ளது.
தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலை கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஜனநாயக போராளிகள் இயக்கம், தமிழ் தேசிய கட்சி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய 6 கட்சிகள் இணைந்து குறித்த கடிதத்தை அனுப்பவுள்ளன. இதற்கான இணக்கப்பாடுகள் முன்னதாக எட்டப்பட்டிருந்த நிலையில், குறித்த கட்சிகளின் தலைவர்கள் நேற்று அந்த கடிதத்தில் கையெழுத்திட்டிருந்தனர்.
எனினும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இன்றைய தினம் அந்த கடிதத்தில் கையொப்பமிட்டதன் பின்னர், அதனை இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் கையளிக்கவுள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார் .
அதேநேரம் இலங்கை தமிழரசு கட்சியும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின், இந்திய விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வலியுறுத்த வேண்டிய விடயங்களை முன்வைத்து, தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கும் கட்சிகள் ஒன்றிணைந்து கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுத்தன.
எவ்வாறாயினும், 13ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் கட்சிகளிடையே இணக்கப்பாடுகள் எட்டப்படாத நிலையில், இலங்கை தமிழரசு கட்சி தனியாக கடிதம் ஒன்றை அனுப்புவதற்கு முடிவு செய்தது. இதனடிப்படையில் ஏனைய கட்சிகள் இணைந்து இன்றைய தினம், குறித்த கடிதத்தை கையளிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளன.