கோவர்ஸ் கோர்ப்பரேஷன் வழக்கில் இருந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விடுவிக்கப்பட்டுள்ளார்.
பணமோசடி வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 5 பேரை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்த குற்றச்சாட்டின் பேரில் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 6 பேர் இந்த வழக்கில் பெயரிடப்பட்டிருந்தனர்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு ஒருங்கிணைப்புச் சேவைகளை வழங்கும் Gowers Corporate Services (Pvt) Limited ஊடாக 30 மில்லியன் ரூபா பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் சட்டமா அதிபர் அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பணிப்பாளர்களான இந்திக்க கருணாஜீவ, சுஜானி போகொல்லாகம, இரேஷா சில்வா, நித்ய சேனானி சமரநாயக்க மற்றும் கோவர்ஸ் கோர்ப்பரேட் சர்வீசஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 11 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது Hello Corp என்ற நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்து Gowers Corporate Services (Pvt) Limited என்ற நிறுவனத்தை நிறுவியதாக ஊழலுக்கு எதிரான குரல் அழைப்பாளர் வசந்த சமரசிங்க செய்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.