விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து அமைச்சர் ரொஷான் ரணசிங்க நீக்கப்பட்டுள்ளார். இவரை பதவி நீக்குவதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி இன்றைய தினம் முன்னெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமன்றி அனைத்து விதமான அமைப்பு பொறுப்புக்களிலுமிருந்தும் ரொஷான் ரணசிங்க நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையக்காலமாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் நாட்டில் நிலவி வருகின்றன. இந்தநிலையில், தற்போதைய சூழலில் தமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பையும், ஜனாதிபதியும், சாகல ரத்நாயக்கவுமே ஏற்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று(27) ஆற்றிய விசேட உரையின் போது, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். தமது வாழ்க்கை தொடர்பில், நிச்சயமற்ற தன்மை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
134 பேர் வாக்களித்து ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்திருப்பினும், அவர் பழிவாங்கல் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில், தமது உயிருக்கு அச்சுறுத்தல் நிலவும் நிலையில், பாதுகாப்பு அவசியமாகும் என அவர் தெரிவித்திருந்தார்.