இலங்கையில் பொது மக்களின் பாதுகாப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட 1990 ‘சுவசெரிய’ அம்பியூலன்ஸ் சேவை இன்று (28) ஏழு வருடங்களைக் கொண்டாடுகிறது.
2016 ஆம் ஆண்டு ஜூலை 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட 1990 ‘சுவசெரிய’ இனால் சுமார் 15,000,000 நோயாளிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ‘சுவசெரிய’ இந்த நாட்டில் மிகவும் திறமையான பொது சேவையாக கருதப்படுகிறது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த 1990 ஆம் ஆண்டு ‘சுவசெரிய’ அம்பியூலன்ஸ் சேவையை நிறுவிய கலாநிதி ஹர்ஷ டி சில்வா, எத்தகைய சவால்கள் வந்தாலும் இந்த சேவையை தொடர்ந்தும் பேணுவதற்கு தன்னால் முடிந்த ஆதரவை வழங்குவேன் என வலியுறுத்தியுள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து பொருளாதாரத்தை பேணுவதற்கு கடந்த காலங்களில் திறைசேரியில் இருந்து போதியளவு பணத்தை பெறுவது சிரமமாக இருந்த போது, தனியார் துறையினரின் நிதி உதவியின் மூலம் செலவினங்களின் ஒரு பகுதி ஈடுசெய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்த சேவை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் அனைத்து அரசாங்கங்களும் இந்த சேவையை பேணுவதற்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“இந்த சேவை இப்போது இந்த நாட்டு மக்களின் மீட்பராக மாறியுள்ளது. எத்தகைய சவால்கள் வந்தாலும் இந்த சேவையை பேண வேண்டும். இச்சேவையை ஆரம்பிப்பதற்கு உறுதுணையாக இருந்த தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ‘சுவசெரிய’ அறக்கட்டளையின் தலைவர் மற்றும் அனைத்து நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் 1500க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இந்த சேவையை தொடங்க நிதி மானியம் மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்கிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.