ஊடகவியலாளர்கள் பொதுமக்களுக்காகவே தமது உயிரைக்கூட பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்படும் போது பொது மக்களுக்கும் தமது எதிர்ப்பை வெளியிட வேண்டும் என்று இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் துமிந்த சம்பத் தெரிவித்தார்.
மருதானை சி.எஸ்.ஆர். நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும்தெரிவிக்கையில்,
” ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர போன்று ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவது இது முதல்முறையல்ல. ஊடகச்சுதந்திரம் தொடர்பிலான இலங்கையின் வரலாறு கறும்புள்ளியாகவே உள்ளது.
ஊடகவியலாளர்களை மிகவும் மிலேச்சத்தனமாக நடாத்தும் நாடாகவே இலங்கையை உலகம் பார்க்கிறது. தரிந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலானது அவர் கைதுசெய்யப்பட்டதற்கும் அப்பால் சென்றதொரு விடயமாகும்.
கைதுசெய்யப்படுவது ஒரு நிகழ்ச்சி நிரலாக இருந்த போதிலும் இங்கு அவர்மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
தொழிற்சங்கங்களும், சிவில் அமைப்புகளும், ஊடகவியலாளர்களும் நாட்டு மக்களில் ஒரு பகுதியாகும்.
ஊடகவியலாளர்கள் தமது உயிரை தியாகம் செய்துதான் மக்களுக்காக தகவல்களை திரட்டி வழங்குகிறார்கள். இவர்களுக்கு எதிராக அதிகாரத்தை பிரயோகிக்கும் போது மக்கள் எழுச்சிக்கொள்ள வேண்டும்.
பொலிஸாருக்கு இந்த நாட்டின் பிரச்சினைகள் குறித்து தெரியாதா? அவர்களுக்கு இந்த சமூகத்தின் மீது அக்கறை இல்லையா?.
துரதிஷ்டவசமானதுதான், இவ்வாறு சமூக சமத்துவத்துக்கும் மக்களின் பிரச்சினைகளுக்கு எதிராக குரல்கொடுப்பவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவது.
மக்களுக்கு தகவல்களை திரட்டி வழங்குவபவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது மிகவும் கவலைக்குரியதாகும்.
ஊடகவியலாளர்கள்மீது தாக்குதல்கள் நடைபெறும் சந்தர்ப்பங்களில் மக்கள் அதற்கு எதிராக தமது எதிர்ப்பை வெளியிட வேண்டும்.
எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை, லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டமை, சிவராம் படுகொலை செய்யப்பட்டமை, போதல ஜெயந்தமீது தாக்குதல் நடத்தப்பட்டமை மற்றும் கடந்த காலங்களில் ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதுடன் அவை எரியூட்டப்பட்டன.
இந்த சம்பவங்கள் எதற்கும் இன்னமும் நீதி கிடைக்கவில்லை.
இவைதான் தவறான முன்னுதாரணங்கள். வரலாற்றில் இடம்பெற்ற சம்பவங்கள் மற்றும் சமகாலத்தில் இடம்பெறும் சம்பங்களுக்கு எதிராக நாம் ஒன்றிணைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.