தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக வெளியிடப்பட்ட செய்தியை இலங்கை இராணுவம் முற்றாக மறுப்பதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், உயிருடன் நலமாக இருப்பதாக உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன், தஞ்சாவூரில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
அதன்போது, பிரபாகரன், அவருடைய மனைவி, மகள் ஆகியோர் நலமுடன் இருப்பதாகவும் அவர்கள் உரிய நேரத்தில் வெளிப்படுவார்கள் எனவும் பழ. நெடுமாறன் தெரிவித்திருக்கிறார்.
இலங்கையில் ராஜபக்ஷக்களின் ஆட்சியை தோற்கடிக்கப்பட்டுள்ள சூழ்நிலையும், பெரும்பான்மை மக்களின் சக்தி வாய்ந்த கிளர்ச்சியும், பிரபாகரன் வெளிவர சரியான நேரமாக அமைந்துள்ளதாக தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து பேசிய அவர், “பிரபாகரன் பற்றிய ஒரு உண்மையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சர்வதேச சூழலும் ராஜபக்ஷ ஆட்சிக்கு எதிராக வெடித்த இலங்கை மக்களின் போராட்டம் அவர் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.
இந்த சூழலில் பிரபாகரன் மிக்க நலமுடன் இருக்கிறார் என்ற செய்தியை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாக தெரிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
இதுவரை அவரைப் பற்றி திட்டமிட்டு பரப்பிய ஊகங்களுக்கும், ஐயங்களுக்கு இந்தச் செய்தி உறுதியான முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புகிறேன்.
தமிழ் மக்களின் விடுதலைக்கான திட்டத்தினை அவர் விரைவில் அறிவிக்க இருக்கிறார்.”
எனவே, தமிழின மக்களும், உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவினை அளிக்க முன்வருமாறும் பழ. நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில், கருத்து வெளியிட்ட இலங்கை இராணுவப் பேச்சாளர், இந்த கூற்றை முற்றாக மறுப்பதாக தெரிவித்தார்.
அதில் “தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதிக்கட்ட யுத்தத்தில் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் தம் வசம் உள்ளதாக” இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.
மேலும், “2009ஆம் ஆண்டு மே 19 ஆம் திகதி இறுதிக்கட்ட யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டார். அவரது மரபணு ஆதாரங்களும் எம்வசம் உள்ளது. அவரது உடலத்தை கருணா அம்மானும் அடையாளம் காட்டினார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.